வியாழன், 30 டிசம்பர், 2010

மலேசியா வெற்றி!

14 வருடங்களுக்குப் பிறகு, நேற்று (29/12/2010), நம் மலேசிய அணி ஆசியன் காற்பந்து சம்மேளனம் சுசுக்கி கிண்ணம் 2010 [Asean Football Federation (AFF) Suzuki Cup 2010] இரண்டாம் கட்ட இறுதி சுற்றில் 4-2 புள்ளியில் இந்தோநேசிய அணியை இந்தோநேசியாவில் கெலோரா புங் கர்ணோ அரங்கத்தில் (Gelora Bung Karno Stadium, Indonesia) வீழ்த்தியது.



கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.

இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.


இந்த கனவை நிறைவேற்றிய கி. ராஜகோபால் அவர்களின் பயிற்சியிலும் வழிகாட்டுதலிலும் தங்கள் திறனை மெருகேற்றிக் கொண்ட மலேசிய அணியின் சாதனைக்கு வாழ்த்துகள்!

இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.

MALAYSIA BOLEH!!! (மலேசியாவால் முடியும்)



நன்றி:
தி மலேசியன் இன்சைடர் (The Malaysian Insider)
http://www.themalaysianinsider.com/bahasa/article/piala-suzuki-penantian-14-tahun-malaysia-berakhir/

வியாழன், 2 டிசம்பர், 2010

"2012" - தமிழ் மேடை நாடகம்

நேற்று (1/12/2010) தாமான் புடாயாவில் நடைபெற்ற எஸ். டி. பாலாவின் “2012” தமிழ் மேடை நாடகத்திற்கு என் நண்பருடன் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்த நிகழ்ச்சி இது.


இருபது ரிங்கிட் நுழைவு சீட்டில் உள்ளே புகுந்து அமர்ந்தோம். நேற்று முதல் காட்சிக்கு எங்களையும் சேர்த்து சுமார் 35 இரசிகர்கள் இருந்திருப்பார்கள். சரியாக 8.31-க்கு நாடகம் தொடங்கி 10.30-க்கு முடிவுற்றது.


இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.

இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.

அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா?
இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.

இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!

எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.

வியாழன், 18 நவம்பர், 2010

உயிர்சித்திரங்கள்

இன்று (18/11/2010) காலை மணி 1.30 ஆகியும் தூக்கம் வரவில்லை. விடிந்தால் வேலை என்ற வற்புறுத்தலில் தூங்கச் சென்றேன். தூங்க முயற்சித்தேன்... கண்களை மூடினால் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீரா ஆகியோர் கூட்டணி அமைத்து என் தூக்கத்தை கலைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எங்கே தூங்குவது, இருந்தும் என் முயற்சியைத் தொடர்ந்தேன்.

பொழுது விடிந்தது, அதே மூவர்களால் எழுப்பப்பட்டேன். எழுந்தேன்; காலை கடன்களை முடித்தேன்; அலுவலகம் சேர்ந்தேன். இப்பொழுது மதியம் மணி 1. அவர்கள் இன்னும் என்னை துரத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்... யார் இவர்கள்? ஏன்?

மீனாட்சியும் பொன்னம்மாளும் ஒலி, ஒளியில் காட்சியமைக்கப்படாத இரு சித்திரங்கள். இவர்கள் இருவருமே JK-வின் (ஜெயகாந்தன்) எழுத்துகளினால் செதுக்கப்பட்ட ‘தர்க்கம்’ சிறுகதையை உயிரூட்டும் பெரும்பாத்திரங்கள். இந்த கதையை நேற்றைய (17/11/2010) காலை பசியாற்றுதலுக்குப் பிறகு வாசிக்க நேர்ந்தது.

சில சமயங்களில் கதைகளை வாசிக்கும் பொழுது மனதில் அதை காட்சி படுத்திக்கொள்வது புரிதலுக்கு வசதியாக இருக்கும். அப்படிதான் தர்க்கமும் காட்சியமைக்கப்பட்டது. மீனாட்சியும் பொன்னம்மாளும் செய்துகொள்ளும் தர்கத்தின் எதிர்வினைதான் கதையின் முடிவு. அதை மனதில் முழுவதுமாய் காட்சிப்படுத்த கடினமாகத்தான் இருந்தது எனினும் அக்காட்சி ஒரு வகையில் சிறப்பாகவே அமைந்தது, “ரகுபதி ராகவ ராஜாராம்... பதிதபாவன சீதாராம்...” பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டு மேலும் வலுச்சேர்த்தது.

சில நிமிடங்களுக்குள் தர்க்கம் வாசித்து முடித்தாயிற்று. அடுத்தபடியாக JK-வின் ‘துறவு’-க்குள் புகுந்தேன். துறவை தொடர முடியவில்லை. தர்க்கமே என்னை முழுமையாய் ஆட்கொண்டிருந்தது. அதன் தாக்கத்திருலிருந்து விடுப்பட முடியவில்லை. பல முறை முயற்சித்தும் இரண்டு பக்கங்களைக்கூட கடக்கவில்லை. முடிவில் துறவை துறந்தேன்.

அன்று முழுவதும் வேறு எதையும் கூட படிக்க முடியவில்லை...

நேரம் பிற்பகல் மணி 3, அஸ்ட்ரோ த
ங்கத்திரையில் ராவணன் படம் ஒளியேறியது. வீரா மணிரத்தினத்தின் ராவணன். படத்தின் இறுதிக் கட்டத்தில் அவன் இறக்கும் காட்சி மட்டும் என்னை நெகிழ வைத்தது. அதற்கு மூல காரணம் பின்னனியில் ஒலிக்கும் ரஹ்மானின் பின்னணி பாடல்.


பாடலுடன் கூடிய ராவணனின் இறுதிக்காட்சி மட்டும் காரணமின்றி என் மனதை மீண்டும் மீண்டும் வருடிச் செல்கிறது. சுமார் 5.10-க்கு படம் முடிவுற்றது. ஆனால், அதன் தாக்கம் மட்டும் என்னை பின்தொடர்கின்றது.



இதே போன்ற மன நிலையை பல முறைகள் எதிர்கொண்டிருந்தாலும் குறிப்பாக இரு வாரங்களுக்கு முன் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா' என்னை பெருமளவு பாதித்திருந்தது. இந்த ஒருவனின் மனதாக்கத்திலிருந்து முழுமையாக விடுப்படுவதற்குள் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீராவின் கூட்டணியா...!?

ஏனோ இந்த கதாபத்திரங்கள் அனைத்தும் கதை பலத்துக்காக புனையப்பட்டிருந்தாலும் வாசிப்பவர்ளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான புனைவுகள் பலரது தூக்கத்தையும் அமைதியையும் குலைத்திருந்தாலும் முடிவில் மன தெளிவையே ஏற்படுத்துகின்றன.

இந்த உலகத்தில் பல மூலை முடுக்குகளில் இந்த காதாபத்திரங்கள் அனைத்தும் சிதறி உயிர்சித்திரங்களாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன இன்று மனிதர்களாக.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

டெல்லி 2010 (DELHI 2010)


19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, டெல்லி 2010 (DELHI 2010), 3/10/2010-ஆம் நாள் பிரமாண்டமாக புதுடெல்லியில் தொடங்கி அதே பிரமாண்டத்துடனும் கோலாகலமான கலை நிகழ்ச்சியுடனும் நேற்று (14/10/2010) நிறைவு பெற்றது.

பதக்க பட்டியலில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை பெற்று, 2-வது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

பல இன்னல்களை கடந்து, பன்னிரெண்டு நாட்கள் உற்சவத்தை வெற்றிகரமாக RM1853 கோடி (US$6 billion) விளையாட்டு போட்டியை இந்தியா நடத்தி சரித்திரம் படைத்தது.

வாழ்த்துகள் இந்தியா!



மேலும் தெரிந்துக்கொள்ள:

1. http://www.cwgdelhi2010.org/
2. http://en.wikipedia.org/wiki/2010_Commonwealth_Games
3. http://www.themalaysianinsider.com/sports/article/delhi-overcomes-challenges-to-close-on-a-high/
4. http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18001&id1=12
5. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=14&Value2=7314&value3=I
6. http://indiatoday.intoday.in/site/specials/cwg/index.jsp
7. http://www.bbc.co.uk/blogs/matthewpinsent/2010/10/what_will_commonwealth_legacy.html

இன்னல்களை பற்றி தெரிந்துக்கொள்ள:
1. http://www.bbc.co.uk/news/world-south-asia-11525504

புதன், 4 மார்ச், 2009

இருவர் 2 – தமிழ் மேடை நாடகம்


பல மாதங்களாக காத்திருந்த இந்த தமிழ் மேடை நாடகத்தை காண முதல் காட்சிக்கு பசியையும் பொருட்படுத்தாமல் அலுவல் முடிந்ததும் என் நண்பர்களுடன் நேற்றிரவு (03/03/2009) இஸ்தானா புடாயாவிற்கு (Istana Budaya) சிட்டுக் குருவியாய் பறந்தேன். இரவு 8.31-க்கு தொடங்கிய நாடகத்தை, கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது. முப்பது வெள்ளி நுழைச்சீட்டில் முப்புற இருக்கையில் தெளிவாக காட்சிகளைக் காணும்படி அமைந்த அமர்வு மகிழ்ச்சி.


2004-ஆம் ஆண்டு அறங்கேறிய இருவர், மலேசியாவிலும் தமிழகத்திலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிப் படைப்பு. மலேசிய நாட்டில் முதல் முறையாக இருவர்களை மட்டுமே தாங்கிய மேடை நாடகம் என்று மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெற்று சாதனை படைத்தது இந்த ‘இருவர்’.

இந்த சாதனைகளுக்கு ஆதாரமான இந்த நூற்றாண்டின் மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த ஒரு புதையல் இயக்குனர் எஸ். டி. பாலா; அவர்களின் மற்றொரு சிறந்த படைப்புதான் இந்த ‘இருவர் 2’ தமிழ் மேடை நாடகம். இது 2009-ஆம் ஆண்டின் இவரின் முதல் படைப்பாக மலர்ந்தாலும், தமிழ் மேடை நாடகங்களில் இது இவரின் 20-வது படைப்பு.


மலேசிய திருநாட்டு தமிழ் மேடை நாடகத்தின் அழிவை உயிர்பித்த இந்த சாதாரண மனிதனின் சாதனை பல. எல்லாம் மேடை நாடகத்தினாலேயே தேடி வந்தது. தமிழகத்தையே பேச வைத்த இவரின் இருவர், இயக்குனர் சிகரம் பாலசந்தரையே மனதார பாராட்ட வைத்ததுதான் குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத் தலைவனுக்கும் குடும்பத் தலைவிக்கும் ஏற்படும் கருத்துவேறுபாட்டின் விளைவுகளை மையமாக வைத்து நகர்த்திய கதை, இருவர் 2. சுமார் இரண்டு மணி நேரங்கள் தோய்வில்லாமல் நகர்ந்த இந்த நாடகம் என் பசியையும் மறக்கவைத்தது. மிகவும் சிறப்பாக இரசிக்கும்படியாக இந்த நாடகம் அமைந்தற்கு கூடியிருந்த நாற்பது இரசிகர்களின் கைத்தட்டலே சாட்சி. அதைவிட, இரசிகர்களாகிய நாங்கள் அனைவரும் இறுதிவரை கவனச்சிதறல் இல்லாமல் அரங்கிலேயே கட்டுண்டு கிடந்தது மற்றுமொரு சாட்சி.

இந்த தரமான படைப்புக்கு எஸ். டி. பாலாவிற்கும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்! குறிப்பாக இந்த மேடைநாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து வாழ்ந்து காட்டிய, வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!


http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html

http://kanaigal.blogspot.com/2009/02/11_19.html

திங்கள், 23 பிப்ரவரி, 2009

வாழ்த்துக்கள் - ஏ.ஆர். ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன; சிறந்த இசைக்காகவும் (Original Score), சிறந்த பாடலுக்காகவும் (Original Song) விருது அளிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!


படம்-தினமலர்: நன்றி.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

வெற்றி வேல் முருகா!

தைப்பூசம் – சுங்கைப்பட்டாணி

8/2/2009, காலை 11 மணிக்கு சுங்கைப்பட்டாணியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் சென்றேன். வாகனத்தை ஜாலான் செகெராட் (Jalan Sekerat) காந்தி நினைவு மண்டப வளாகத்தில் நிறுத்தி விட்டு, ஏறக்குறைய 500 மீட்டர் கோயிலை நோக்கி நடந்தோம். நடக்கும் வழியெல்லாம் இடதும் வலதும் தண்ணீர் பந்தல்கள். கோயிலை நெருங்க நெருங்க கூட்ட நெரிசல் அதிகரித்தது. அப்பா அர்ச்சனை சீட்டை வாங்கி வந்ததும், நாங்கள் எல்லோரும் கோயிலின் இராஜகோபுரத்தின் நுழைவாயில் வழியே உள்ளே சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம்.


கோயில் கற்பகிரகத்தில் மூலவருக்கு பக்தர்களின் நேர்த்திகடனான பாலாபிஷேகம் மிகவும் சிறப்பாகவே நடந்தேறிய வண்ணம் இருந்தது. பக்தர்கள் வரிசை வரிசையாக பால்குடம் ஏந்தி வந்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் உற்சவருக்கு அர்சனைகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த இடம் குறுகலாக இருந்தப்படியால் மக்கள் கூட்டத்தால் நெரிசலாக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாக குடும்பத்தோடு நின்று ஒருவகையில் அர்சனை பிரசாதத்தை பெற்றுக்கொண்டோம்.


பிறகு, கோயிலின் ஒரு ஓரமாக நாங்கள் நின்று கொண்டு வெளியே சுற்றிவரும் காவடிகளை இரசித்துக் கொண்டிருந்தோம். முன்பைபோல இப்பொழுது மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மிக குறைவு. சிறுவயதில் இந்த காவடிகளை பார்ப்பதற்காகவே தைப்பூசத் திருவிழாவின் வரவுக்காக காத்திருந்ததை நினைத்துக்கொண்டேன். முன்பைவிட இப்பொழுது காவடிகளும் மக்கள் கூட்டமும் அதிகரித்தே காணப்படுகிறது. ஏறக்குறைய 250,000 பேர் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக இந்த சுங்கைப்பட்டாணி தைப்பூசம் விளங்குகிறது.



கடவுள் படத்தோடு அலங்கரிக்கப்பட்ட பல அழகிய காவடிகளை இன்னும் பக்தர்கள் சுங்கைப்பாட்டாணி முருகனுக்கு எடுக்கிறார்கள். பினாங்கு போல இங்கிலாந்து காற்பந்து குழுக்கான காவடிகளையெல்லாம் சுங்கைப்பட்டாணி பக்தர்கள் எடுக்காமலிருந்ததற்கு நன்றி.


இன்னொரு சிறப்பு அங்கம், காவடிகளுக்கு இசையமைப்பு. முன்பு அதிகமாக முழங்கப்பட்ட தண்டோராக்கள் இந்த வருட தைப்பூசத்திற்கு குறைந்தே காணப்பட்டது. அதற்கு பதிலாக அழகான சீருடை அணிவகுப்பில் உறுமி மேளங்கள் இசைக்கப்பட்டன; பாராட்டுகள். இன்னும் சில வருடங்களில் இந்த உறுமி மேளம் மட்டுமே தைப்பூசத்திருவிழாவிற்கு காவடிகளுக்காக இசைக்கப்படும் ஒரு முக்கிய இசைக்கருவியாக அமைந்துவிடும் என நான் நம்பிக்கைக் கொள்கிறேன்; வாழ்த்துக்கள்!








மதியம் மணி 12.30, வெயில் அதிகமாக இருந்ததால் என் குடும்பத்தாரை கோயிலிலேயே இருக்கச் சொல்லி விட்டு நான் மட்டும் கோயில் நிர்வாகத்தால் கோயில் திருமண மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை பெறச் சென்றேன். நீண்ட வருசையில் நின்று இரு அன்ன பொட்டலங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் கோயிலின் அருகே வந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். செல்லும் வழியில் அனைத்து தண்ணீர் பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். முருக தரிசனத்தின் அகமகிழ்வோடு அனைவரும் வீடு வந்தடைந்தோம்.