திங்கள், 16 ஜூலை, 2012

சங்க கால உணவு திருநாள் 2012

நேற்று (15/07/2012), ஒரு உணவு திருநாளுக்குச் சென்றிருந்தேன். சங்க கால உணவு திருநாள் 2012, ரோயல் சிலாங்கூர் கிளபில் (Royal Selangor Club, Dataran Merdeka.) இனிதே கொண்டாடப்பட்டது. பிரபல தென்நிந்திய சமயல்காரர் தாமு ஐயா அவர்களின் தலைமையில் சுவையான 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

சங்க கால உணவு திருநாள் 2012


வரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.

பரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.

தேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.

நல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…